ஜனவரி 13,2023
சபரிமலை, சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால வருமானம் 310 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வக்கீல் அனந்தகோபன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: மகர ஜோதி தரிசனத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளது. அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்ற கணக்கின் படி எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கியிருக்கும் இடங்களில் சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தெரியாமல் சமைக்கும் பக்தர்களிடம் போலீஸ் தங்கள் முறையை பயன்படுத்தாமல் அவர்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். அன்னதான மண்டபத்தில் செல்லும் அனைவருக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்படும். இங்கு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு தனி கியூ ஏற்படுத்தப்படும். அரவணையை பொறுத்தவரை அனைவருக்கும் கிடைக்க தேவசம்போர்டு முயற்சி்கிறது. கூட்டம் அதிகமானால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மண்டல காலத்தில் 231.55 கோடி ரூபாயும், மகரவிளக்கு காலத்தில் 12–ம் தேதி வரை 78.85 கோடி ரூபாயும் வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான அரிவராசனம் விருது கேரளாவை சேர்ந்த ஸ்ரீகுமாரன் தம்பிக்கு நாளை நடக்கும் விழாவில் தேவசம்போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்குவார். இவ்வாறு அவர் கூறினார்.