இளைஞன் ஒருவன் வில் வித்தையில் தேர்ச்சி பெற்று இருந்தான். அவன் அம்பு எய்தால் குறி எப்போதும் தவறாது. இதனால் தற்பெருமை கொண்ட அவன், பிறரை மதிக்கவில்லை. இதை கவனித்த ஆசிரியர், அவனை மலை உச்சி ஒன்றிற்கு அழைத்து சென்றார். அங்கே இரண்டு பாறைகளுக்கு நடுவே மரக்கட்டை ஒன்று இருந்தது. கீழே பாதாளம் தெரிந்தது. அந்த மரக்கட்டையில் நடந்து நடுவே சென்ற ஆசிரியர், அருகில் இருந்த மரத்திற்கு குறி வைத்தார். மரத்தில் இருந்த பழமும் விழுந்தது. சீடனிடம், ‘‘இதே போல நீயும் செய்’’ என்றார். பள்ளத்தை பார்த்து பயந்த அவன், முயற்சிக்கவே இல்லை. ‘‘என்னப்பா... பெரிய சூரனான உனக்கு இதுகூட முடியவில்லையா’’ எனச் சிரித்தார். அவமானத்தில் தலைகுனிந்தான். ‘‘உன்னை காயப்படுத்துகிறேன் என்று நினைக்காதே. வில் வித்தையில் குறி பார்த்து அம்பு எய்வது மட்டும் திறமை அல்ல. உண்மையில் மனதைக் கட்டுப்படுத்தி ஒரு செயலை செய்வதுதான் சிறந்த திறமை’’ என்றார்.