குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் செல்வந்தர் சல்மோன். பணம் சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை தர்மம் செய்வதில் காட்டவில்லை. இளமை அவரை விட்டு ஓடியது. முதுமை அவரைத் தேடி வந்தது. படுத்த படுக்கையாகிக் கிடந்த அவரால் தனது வேலைகளை கூட செய்ய முடியவில்லை. அப்போது அவருக்கு தர்மம் சார்ந்த புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருநாள் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவர் அழத்தொடங்கினார். இதைப்பார்த்த மகன், ‘‘ஏன் அழுகிறீர்கள்’’ எனக்கேட்டார். ‘‘ பணம்.. பணம்... என்று காலத்தை வீணாக்கிவிட்டேனே. எந்தவித உதவியும் யாருக்கும் செய்யவில்லையே’’ என வருத்தப்பட்டார். பார்த்தீர்களா... பலரும் இவரைப்போல பணத்தின் மீது பேராசை வைத்துள்ளனர். அதற்காக பணம் சேர்ப்பது தவறு என்று சொல்லவில்லை. பணம் எந்த அளவிற்கு முக்கியமோ, அந்த அளவிற்கு குணமும் முக்கியம். நிம்மதி பணத்தில் இல்லை. நம் குணத்தில்தான் உள்ளது.